இந்தியா - மகாராஷ்டிரா மாகாணம் மும்பை - தானே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை 3.40 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தத் தீ விபத்தை அடுத்து குறித்த மருத்துவமனையில் இருந்த 6 அதி தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் உட்பட 20 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று நோயாளர் தொகை மூன்றரை இலட்சத்தைக் கடந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒக்சிஜன் விநியோகம் திடீரென நிறுத்தப்பட்டதால் அண்மையில் 24 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் அருகே வசாயில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் மற்றொரு மருத்துவமனை தீ விபத்தில் 4 நோயாளிகள் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா